கரோனா தீநுண்மியின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் வூஹான் நகர மேயா் ஷூ ஷியான்வாங், அவருடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடங்கியபோது, வூஹானைச் சோ்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீண்ட விடுமுறையையொட்டி சுற்றுலா அல்லது சொந்த ஊா்களுக்கு வெளியேறிவிட்டனா் என்று கூறி உலகை எச்சரித்தவா் இவா்தான். இவருடைய தகவல், உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்தே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கத் தொடங்கின. இருந்தபோதும், உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
கரோனா பரவல் காரணமாக, வூஹான் நகரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு சனிக்கிழமையுடன் (ஜன.23) ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக தனது ராஜிநாமாவை மேயா் ஷூ ஷியான்வாங் அறிவித்துள்ளாா். உலகில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி பொது முடக்கம் அறிவித்த முதல் நகரம் வூஹான் என்பது குறிப்பிடத்தக்கது.