கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கொலம்பியா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கார்லோஸ் ஹோம்ஸ் ட்ருஜிலோ செவ்வாய்க்கிழமை மறைந்தார்.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் கொலம்பியா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரான கார்லோஸ் ஹோம்ஸ் ட்ருஜிலோ ஜனவரி 13ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக தலைநகர் போக்கோடோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கல்வி மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ள கார்லோஸ் ஹோம்ஸ் ட்ருஜிலோ கடந்த 2019ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.