கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கியூபாவில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா பெருந்தொற்று உலக வல்லரசு நாடுகளையே நிலைகுலைய வைத்துள்ளது. வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கியூபாவில் அரசுக்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதற்கும் கரோனா பெருந்தொற்றை கையாண்ட விதத்தை எதிர்த்தும் அவர்கள் போராடிவருகின்றனர்.
உணவு பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகள் இன்றி தவித்துவருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "சுதந்திரத்தை கோரும் கியூப மக்களுக்கு துணையாக நிற்கிறோம். சர்வாதிகார ஆட்சியின் காரணமாக பல பத்தாண்டுகளாக பொருளாதார மந்த நிலையில் அவர்கள் சிக்கி தவித்துவருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையான போராட்டங்களை அமெரிக்கா திசைதிருப்பிவருவதாக அதிபர் டயஸ்-கேனல் தெரிவித்துள்ளார். கியூபாவில் தடுப்பூசிகள் இறக்குமதி செய்வதில்லை. மாறாக சாபர்னா என்ற தடுப்பூசியை உள்நாட்டிலே அந்நாடு தயாரித்துள்ளது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குட்டித் தீவு நாடான கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.