ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணையே நல்ல பலன் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணை அளித்தபோது, அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, வைரஸை எதிர்த்து போராடுவதற்கான போதுமான வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஒற்றை தவணையே தருவதாக கூறப்பட்டுள்ளது.
இரண்டு தவணையை காட்டிலும் ஒற்றை தவணை நல்ல பலன் தருகிறதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியானது.
ஆய்வு முடிவுகளை வெளியிட்ட மூத்த விஞ்ஞானி ஆண்ட்ரியா கமர்னிக் இதுகுறித்து கூறுகையில், "பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருகிறது. பல்வேறு நாடுகளில் சமமற்ற தன்மையில் தடுப்பூசி கிடைக்கப்பெறுகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி குறித்த தரவுகள் சுகாதாரத்துறைக்கு உடனடியாக தேவைப்படுகிறது.
உலகளாவிய சுகாதார அவசர காலத்தில் விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்த இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு பல முடிவுகளை எடுக்கலாம். மற்ற தடுப்பூசிகளின் ஒற்றை தவணையின் பயன்பாடு குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டோம்.
அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் ஒற்றை தவணை 76 விழுக்காடு பயன் உள்ளதாக உள்ளது. ஆனால், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்திய மூன்றே வாரத்தில் 94 விழுக்காடு பயன் அளிக்கிறது" என்றார்.