தென் ஆப்பிரிக்கா : வன்முறை போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வு
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உருவான வன்முறைப் போராட்டங்கள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வருகின்றன.
மக்கள் அதிபர் எனக் கொண்டாடபட்ட ஜேக்கப் ஜூமாவின் மீது 2009-2018 ஆண்டு வரை எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றன. ஆனால் இதுவரை ஜூமா தன் தரப்பின் சார்பாக அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்காமலும் தன் சாட்சியத்தை அளிக்காமலும் இருந்ததால் ஜூலை 7 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பிற்காக 15 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் இருக்கும் நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆயுதங்களுடன் இருப்பதால் அரசிற்கு பெரும் பிரச்னையாகி வருகிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, அரசு நடவடிக்கைகளில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்திருக்கிறது.
இதுவரை காவல்துறை 2,500-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தும் 1488 வழக்குகளையும் பதிவு செய்ததோடு தேடுதலில் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகளிடமிருந்து 4 ஆயிரம் தோட்டாக்களையும் உரிமம் பெறாத துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாட்டின் பொருளாதார இழப்பை சரி செய்வதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டு அதியாவசிய பொருட்களான மருந்துகள், உணவுப்பொருள்கள் ,எரி பொருட்கள் கொண்டு செல்லப்படும் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் அரசு கலவரத்தை கட்டுப்படுத்த 25000 பாதுகாப்பு படையினரை நியமித்திருக்கிறார்கள்.