இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சா்வதேசப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஜீன் கேஸ்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அஸ்ட்ராஸெனகாவால் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள்.
அதே நேரம், டெல்டா வகைக் கரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லைகளில் சோதனைகள் கடுமையாக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மற்றும் ஸ்வீடனைச் சோ்ந்த அஸ்ட்ரா ஸெனகா நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை, இந்தியாவின் சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது.
இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோா் செலுத்தியிருக்க வேண்டிய கரோனா தடுப்பூசிகளின் பட்டியலில், ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
இதற்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களையும் அனுமதிக்க ஏற்கெனவே பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் சம்மதித்தன. இந்தச் சூழலில், பிரான்ஸும் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.