கரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். தொற்று பாதிப்பு ஏற்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
இந்நிலையில் உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக 15 லட்சம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
லான்செட் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் 14 மாதங்களில் உலகம் முழுவதும் 15 லட்சம் குழந்தைகள் தங்களைக் கவனித்து வந்த பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
கரோனா இறப்புகள் அதிகம் பதிவான 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஒவ்வொரு 19 பேர் இறப்பில் ஒரு குழந்தை தனது பெற்றோரை இழந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு 12 விநாடிக்கும் ஒரு குழந்தை தனது பெற்றோரை இழந்து வருவதாக ஆய்வுக்குழுவைச் சேர்ந்த டாக்டர். சூசன் ஹில்ஸ் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக் கோரியுள்ள இந்த ஆய்வானது அவர்களுக்கு நீண்டகால உதவிகள் தேவைப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது.