பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்ட மேக்ரான் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அட்டல் கூறுகையில், "இந்த விவகாரத்தை அதிபர் உன்னிப்பாகவும் தீவிரமாகவும் கவனித்துவருகிறார். பெகாசஸ் விவகாரம் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்படாத தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது" என்றார்.
இம்மானுவேல் மேக்ரானை தவிர, இராக் அதிபர் பர்ஹம் சாலி, தென்னாப்பிரிக்க அதிபர் சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பெளலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி ஆகியோரின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் தனிச் செயலாளர்களின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்ததாக தி வயர் வெளியிட்ட செய்தி மூலம் அம்பலமாகியுள்ளது.