12 முதல் 17 வயதிலான சிறார்களுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது வரை, வயது வந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
இதனிடையே, சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கடந்த மே மாதம், 12 முதல் 17 வயதிலான சிறார்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மாடர்னா தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய மருத்துவ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "18 வயதுக்கு மேலானவர்களுக்கு போடப்படும் ஸ்பைக்வாக்ஸ் தடுப்பூசி 12 முதல் 17 வயதிலான சிறார்களுக்கு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
12 முதல் 17 வயதிலான 3,732 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது வெளியாகும் அதே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி சிறார்களிடமும் தென்பட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.