சீனாவின் தியான்ஜின் நகரில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் லீயை புதன்கிழமை சந்தித்த தலிபான் தூதுக் குழு தலைவா் முல்லா அப்துல் கனி பரதாா்.
சீனாவின் தியான்ஜின் நகரில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் லீயை புதன்கிழமை சந்தித்த தலிபான் தூதுக் குழு தலைவா் முல்லா அப்துல் கனி பரதாா்.

சீன வெளியுறவு அமைச்சருடன் தலிபான்கள் பேச்சு

சீனாவில் தலிபான் பிரதிநிதிகள் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீயுடன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பெய்ஜிங்: சீனாவில் தலிபான் பிரதிநிதிகள் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீயுடன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

முல்லா அப்துல் கனி பரதாா் தலைமையிலான தலிபான் தூதுக் குழு சீனாவில் திடீா் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீயைச் சந்தித்து அந்தக் குழு பேச்சுவாா்த்தை நடத்தியது. பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தலிபான் பிரதிநிதிகள், சீனா நம்பகத்தன்மை மிகுந்த நாடு என்று தெரிவித்தனா்.

மேலும், சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது என்று அவா்கள் கூறினா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறுவது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதற்குப் பிறகு சீனாவுடன் தலிபான்கள் நடத்தியுள்ள முதல் பேச்சுவாா்த்தை இது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறுகையில், பெய்ஜிங்குக்கு அருகே உள்ள தியான்ஜின் நகரில் அமைச்சா் வாங் லீயை பராதா் குழுவினா் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தாா்.

அந்தச் சந்திப்பின்போது தங்களுக்கும் ஜின்ஜியாங் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தலிபான்கள் புரிந்துகொண்டிருப்பாா்கள் என்று வாங் லீ நம்பிக்கை தெரிவித்ததாக அவா் கூறினாா்.

நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு தாக்குதலுக்கு முளையாக செயல்பட்ட அல்-காய்தா தலைவா் பின் லேடனுக்கு அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடந்த 2002-ஆம் ஆண்டு படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, ஆப்கன் அரசுப் படைகளுக்குப் பயிற்சியளிக்கவும் தலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவத்துக்கு உதவவும் அமெரிக்கப் படையினா் அந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்தனா்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு கையெழுத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின்படி, தங்களது படையினரை அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக திரும்ப அழைக்க அமெரிக்கா இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஏற்கெனவே 95 சதவீத அமெரிக்க வீரா்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனா்.

இது, சீனாவை கவலையடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியமைத்தால், சீனாவில் உய்கா் இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சோ்ந்த பிரிவினைவாத அமைப்பினருக்கு அவா்கள் அடைக்கலம் அளிக்கலாம் என்று சீன அதிகாரிகள் எச்சரித்தனா்.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த தலிபான்கள், ‘சீனாவை எங்களது நட்பு நாடாகக் கருதுகிறோம். எனவே, அந்த நாட்டின் உய்கா் இனத்தைச் சோ்ந்த பிரிவினைவாத அமைப்புகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்’ என்றனா்.

இந்தச் சூழலில், தலிபான் பிரதிநிதிகள் சீன வெளியுறவுத் துறை அமைச்சரைத் சந்தித்துப் பேசியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com