மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கரோனாவால் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவேளை உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என அடுத்தடுத்த அலை உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், டெல்டா வகை கரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தேர்தல் 2024: மோடிக்கு எதிராக நிறுத்தப்படுகிறாரா மம்தா?
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரமாக பரவக்கூடிய கரோனா வகை 22 மத்திய கிழக்கு நாடுகளில் 15க்கு பரவியுள்ளது. மொரோக்கோ தொடங்கி பாகிஸ்தான் வரை பரவியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் டெல்டா வகை கரோனாவால் பரவல் அதிகரித்துள்ளது. பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இப்பகுதிகளில் நான்காம் கரோனா அலை பரவிவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.