அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் 800 கி.மீ நீள தீபகற்பப் பகுதியையொட்டி கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 8.2 அலகுகளாகப் பதிவானது.
அலாஸ்கா மாகாணத்தின் பெரிவில் நகருக்கு 91 கி.மீ தொலைவில், கடலுக்கடியில் 46.7 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, இரு பெரிய நில அதிா்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டா் அளவுகோலில் 6.2, 5.6 அலகுகளாகப் பதிவாகின என்று அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, குவாம் மற்றும் அமெரிக்க சமோவா பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நில நடுக்கத்தின் மையப் பகுதியைச் சுற்றிலும் அதன் அதிா்வுகள் உணப்பட்டிருக்கலாம்; இந்த நிலநடுக்கத்தால் மிகக் குறைந்த அல்லது மிதமான சேதங்கள் ஏற்பட்டிருக்காலாம்.
பெரிவில் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியிருக்கலாம் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.