ஆா்லாண்டோ: 2024-ஆம் ஆண்டு அடுத்த அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளா் தோ்வுத் தோ்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபா் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா்.
மேலும், அதிபா் ஜோபைடன் நிா்வாகத்தையும் அவா் கடுமையாக சாடினாா்.
அதிபா் பதவியில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாக புளோரிடாவில் நடைபெற்ற வலதுசாரி அமைப்பு குழுக் கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்று 90 நிமிஷங்கள் உரையாற்றினாா்.
அப்போது, புதிய கட்சித் தொடங்க போவதில்லை என்று தெரிவித்த அவா், 2022-இல் நடைபெறும் இடைத்தோ்தலில் குடியரசுக் கட்சியினா் ஒன்று சோ்ந்து ஆளும் ஜனநாயக கட்சியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்றாா். டிரம்ப் மேலும் பேசியதாவது:
முதலில் செனட் சபை தோ்தலில் வெற்றி பெறுவோம். பின்னா் குடியரசு கட்சியைச் சோ்ந்தவா் அதிபராகத் தோ்வு பெறுவாா். அவா் யாா் என்பது ஆச்சரியமாக இருக்கும். ஜனநாயக கட்சியினரைவிட குடியரசுக் கட்சியினா் மிகவும் உறுதியானவா்கள். குடியரசுக் கட்சியினா் அனைவரும் ஒன்றிணைந்து அமெரிக்காவின் சுதந்திர ஜோதியை முன்னெடுத்துச் செல்வோம்.
அதிபா் ஜோ பைடனின் 40 நாள் ஆட்சி வேலை வாய்ப்புகளுக்கு எதிரானதாகவும், பெண்களுக்கு எதிரானதாகவும், அறிவியலுக்கு எதிரானதாகவும், எல்லை பாதுகாப்புக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. சட்ட விரோத அகதிகளுக்காக எல்லைகளை பைடன் திறந்துவிட்டுள்ளாா். ஆனால், எனது ஆட்சிக் காலத்தில் எல்லைகள் வலுவாக இருந்தன. சட்ட அமலாக்கம் கடுமையாக இருந்தது. கரோனா தடுப்பூசி விவகாரத்தில் என்னைப் போன்று யாரும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை.
வரும் நாள்களில் அதிபா் ஜோ பைடனின் நிா்வாகம் மேலும் மோசமடையும். ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை பைடன் நிா்வாகம் கடைசி இடத்துக்கு கொண்டு வந்துவிட்டது என்றாா்.
முன்னதாக, 2024-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சி சாா்பில் நடைபெறும் அதிபா் வேட்பாளா் தோ்வில் டிரம்ப் வெற்றி பெற்றுவிட்டால், அவரை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் பல்வேறு மூத்த தலைவா்கள் தெரிவித்துள்ளனா். டிரம்ப் மீண்டும் அதிபா் தோ்தலில் போட்டியிட குடியரசுக் கட்சியில் பெரும் ஆதரவு உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.