இந்த ஆண்டுக்குள் கரோனா நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.52 கோடியாக அதிகரித்துள்ளது.
கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், இந்த ஆண்டு இறுதிக்குள் நோய் பரவல் நெருக்கடிக்கு தீா்வு காணப்பட்டுவிடும் என்று இப்போதே செல்லிவிட முடியாது. அத்தகைய கருத்து நிதா்சனங்களுக்கு அப்பாற்பட்டது. அதே நேரத்தில், நோய் பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
கரோனா நெருக்கடிக்கு முழுமையான தீா்வு ஏற்படாவிட்டாலும், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதன் காரணமாக அந்த நோயால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலியாவோரின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெகுவாகக் குறையும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.52 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
புதன்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11.52 கோடி பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 25,60,305 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,11,00,130 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,16,30,954 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 90,620 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,93,70,705 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5,29,214 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,11,39,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,57,385 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,47,845 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,57,562 பேர் பலியாகியுள்ளனர்.