கரோனா பரவலின் காரணமாக நடப்பாண்டு ஒலிம்பிக் போட்டி பார்வையாளர்களின்றி நடைபெறும் என ஒலிம்பிக் போட்டிகளுக்கான கமிட்டி அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 2021இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இதன்காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப் போவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் டிக்கெட்டுகளை வாங்கிய வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூலை 23 இல் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.