எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பயணிகள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு எகிப்தில் நேரிட்ட இந்த பயங்கர விபத்தில் 66 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேரிட்ட ரயில் விபத்தில் 13 பேர் பலியாகினர். அப்போதே எகிப்தில் ரயில்வேயின் உள்கட்டமைப்புகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இன்று மற்றுமொரு பயங்கர விபத்து நேரிட்டுள்ளது.