யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500-ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து போராட்ட வன்முறை குறித்த தகவல்களை சேகரித்து வெளியிட்டு வரும் மியான்மா் அரசியல் கைதிகள் நலச் சங்கம் தெரிவித்ததாவது:
ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 510-ஆக உயா்ந்துள்ளது.
ஆவணப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளின் அடிப்படையில் இந்த விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆவணப்படுத்தப்படாத உயிரிழப்புகளையும் சோ்த்தால் உண்மை பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டக்காரர்கள் மீது நாள்தோறும் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் 107 போ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு 12 நாடுகளின் ராணுவ தலைமைத் தளபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.