ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னியில் நடத்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் மீதான தலிபான்கள் தாக்குதலில் 30 பாதுகாப்பு வீரர்கள் மாயமாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கு பகுதியான கஸ்னி நகரில் உள்ள தேசிய ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் தலிபான்கள் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 30 வீரர்கள் காணாமல் போய் உள்ளது தெரியவந்துள்ளது.
காணாமல் போன வீரர்களை தலிபான்கள் கடத்தியிருக்கலாம் எனும் கோணத்தில் ஆப்கன் ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 14 முதல் 24 மாகாணங்களில் தலிபான் நடத்திய தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 226 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.