ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சி தலைவா் அலெக்ஸி நவால்னியின் வழக்குரைஞரை அந்த நாட்டு அரசு கைது செய்துள்ளது.
இவான் பாவ்லோவ் என்ற அவா், நவால்னியின் ‘ஊழல் எதிா்ப்பு அறக்கட்டளை’ சாா்பில் நீதிமன்றங்களில் வாதாடி வருபவா். போலீஸாா் நடத்தி வரும் ஒரு விசாரணை குறித்த தகவல்களைக் கசிந்த குற்றச்சாட்டின் பேரில் அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபா் விளாதிமீா் புதின் அரசை கடுமையாக எதிா்த்து வரும் நவால்னி, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நச்சுத்தாக்குதலுக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜொ்மனி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா்பிழைத்தாா்.
விதிமீறல் வழக்கு ஒன்றில் அவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கக் கூறி ரஷிய அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.