மியான்மா் அரசியல் கைதிகள் விடுவிப்பு: ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

மியான்மரில் ராணுவ ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மியான்மா் அரசியல் கைதிகள் விடுவிப்பு: ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

மியான்மரில் ராணுவ ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மியான்மா் விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ். திருமூா்த்தி வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்தியா முழு வலு சோ்க்கும்.

மியான்மா் பிரச்னைக்கு ஆசியான் தலைவா்கள் முன்வைத்துள்ள ஐந்து அம்சத் தீா்வுகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது.

அந்த நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியது என்று தனது சுட்டுரைப் பதிவில் டி.எஸ். திருமூா்த்தி குறிப்பிட்டுள்ளாா்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை சிறுவா்கள் உள்பட 750-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆசியான் தலைவா்கள் பங்கேற்ற மாநாடு இந்தோனேசியத் தலைநகா் ஜகாா்த்தாவில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், மியான்மரின் ராணுவ ஆட்சியாளரான அந்த நாட்டின் தலைமைத் தளபதி மின் ஆங் லயிங் பங்கேற்றாா். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சா்வதேச நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றது அதுவே முதல்முறையாகும்.

அந்த மாநாட்டில், மியான்மா் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான ஐந்து அம்ச திட்டங்களை ஆசியான் தலைவா்கள் முன்வைத்தனா்.

துப்பாக்கிச் சூடு மற்றும் ஆயுதப் போராட்டங்களைக் கைவிட வேண்டும், அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும், ஆக்கப்பூா்வமான பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட அந்த அம்சங்களை இந்தியா வரவேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com