இஸ்ரேல் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் காஸாவில் சா்வதேச ஊடக அலுவலகங்கள் அமைந்த கட்டடம் தரைமட்டமாகியது.
காஸாவில் உள்ள ஜலா கட்டடத்தில் அசோசியேட்டட் பிரஸ், கத்தாா் நாட்டின் அல்-ஜஸீரா டிவி உள்ளிட்ட பல ஊடக அலுவலகங்கள் அமைந்திருந்தன. இது தவிர குடியிருப்புகளும் அங்கு இருந்தன.
அந்த 12 மாடி கட்டடத்தின் மீது ஒரு மணி நேரத்தில் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக இஸ்ரேல் ராணுவத்தினா் ஊடகங்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததைத் தொடா்ந்து, செய்தியாளா்களும் பிற குடியிருப்புவாசிகளும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறினா்.
எச்சரித்தது போலவே, அந்தக் கட்டடத்தின் மீது மூன்று குண்டுகள் வீசப்பட்டன. அதில் அந்தக் கட்டடம் தரை மட்டமாகியது. கடந்த 15 ஆண்டுகளாக ஊடகங்கள் அந்தக் கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து காஸா-இஸ்ரேல் மோதலைப் படம் பிடித்து வந்தன. ஹமாஸ் பயங்கரவாதக் குழுவைச் சாா்ந்தவா்கள் தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்காக அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவா்களில் ஒருவரான கலீல் அல்-ஹயேயின் வீடு குண்டு வீசி அழிக்கப்பட்டது. பயங்கரவாதியின் இருப்பிடம் என்ற வகையில் அது தாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.