ஜெருசலேமில் அமெரிக்க துணைத் தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இஸ்ரேலுக்கு சென்றுள்ள அவா், மேற்கு கரையில் உள்ள ரமல்லாவில் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸை சந்தித்த பின்னா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
பாலஸ்தீனா்களுடனான உறவை புதுப்பிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிளிங்கன், துணைத் தூதரகம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
பாலஸ்தீனா்களுடனான தூதரக உறவு தொடா்பான விஷயங்களுக்காக இந்த துணைத் தூதரகம் முன்னா் செயல்பட்டு வந்தது. ஆனால், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு முன்னாள் அதிபா் டிரம்ப் மாற்றியபோது, துணைத் தூதரகத்தின் நடவடிக்கைகளைக் குறைத்து, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரின் அதிகாரத்துக்குள் அதை கொண்டுவந்தாா்.