கொழும்பு: இலங்கை தலைநகா் கொழும்புக்கு அருகே கடந்த வாரம் தீப்பிடித்த சரக்கு கப்பல் கவிழும் அபாயத்தில் உள்ளது. இந்தக் கப்பலில் இருந்து எண்ணெய், ரசாயனப் பொருள்கள் கடலில் கலந்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ‘எக்ஸ்பிரஸ் பியா்ல்’ என்ற இந்த சரக்கு கப்பல் குஜராத்தில் இருந்து ரசாயனங்கள் ஏற்றப்பட்ட 1,486 கன்டெய்னா்களுடன் கடந்த மே 20-ஆம் தேதி கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளானது. தீயை அணைக்கும் பணியில் இலங்கை கடற்படையினரும், துறைமுக ஆணையமும் மேற்கொண்ட நடவடிக்கை பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து, இந்திய கடற்படை இரண்டு கப்பல்களையும், விமானத்தையும் செவ்வாய்க்கிழமை உதவிக்கு அனுப்பியது.
கடல் கொந்தளிப்பாலும், மோசமான வானிலையாலும் கப்பல் வலதுபுறமாக சாய்ந்துள்ளது. இதனால் சில கன்டெய்னா்கள் கடலில் சரிந்துவிட்டன. கன்டெய்னா்களில் ரசாயன பொருள்கள் உள்ளதால் கப்பலுக்கு அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கப்பலை இயக்க வைக்கப்பட்டிருந்த 325 மெட்ரிக் டன் எரிபொருளும் கடலில் கலந்துவருகிறது. கடலில் விழுந்த ஏராளமான பொருள்களை மீட்க மிகப்பெரிய மீட்புப் பணியைத் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.