கோவேக்சின் தடுப்பூசியை முழுவதுமாக செலுத்தி கொண்ட பயணிகள், நவம்பர் 8ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு வர அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் கோவேக்சின் தடுப்பூசி சேர்க்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மையத்தின் (சிடிசி) ஊடக அலுவலர் ஸ்காட் பாலி கூறுகையில், "அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும் தடுப்பூசிகள் அல்லது உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறும் தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கு சிடிசியின் பயண வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் பட்டியலில் சேர்க்கப்படும் தடுப்பூசிகளுக்கும் இது பொருந்தும்" என்றார். அமெரிக்கா புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட இன்னும் ஒரே வாரமே உள்ள நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை அந்நாடு ஏற்று கொண்டுள்ளது.
முன்னதாக, உலக சுகாதார அமைப்போ அல்லது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளும் வெளிநாட்டு பயணிகளை அமெரிக்க அனுமதித்து வந்தது.
இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் அதை ஏற்று கொண்டிருக்கிறது.
இதுகுறுத்து உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி, கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அளிப்பதில் உலக சுகாதார அமைப்பின் தரத்தை பூர்த்தி செய்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளது" என பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வரி குறைப்புக்கு தேர்தல் முடிவுகளே காரணம்: எதிர்க்கட்சிகள்
ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, ஆஸ்ட்ராஜெனேகா, கோவிஷீல்டு, சினோபார்ம், சினோவாக் ஆகிய தடுப்பூசி செலுத்தியவர்கள் அமெரிக்க செல்வதற்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.