டோக்யோ: பல அடுக்கு உருமாற்றம் பெற்ற புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான் பாதிப்பு ஜப்பானில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு அண்மையில் நமீபியாவிலிருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு ஒமைக்ரான் வகை கரோனா பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்கலாமே.. இனி நீங்களும் பெட்ரோல், டீசலை பரிசளிக்கலாம்; மாற்றி யோசித்த இந்தியன் ஆயில் நிறுவனம்
இது குறித்து அமைச்சரவைச் செயலாளர் கூறுகையில், ஒமைக்ரான் வகை கரோனா பாதித்த நோயாளி 30 வயதுடைய நபர். ஜப்பானுக்கு வந்த அவருக்கு, ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பரவியிருந்த கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறையை பரிசோதித்ததில், அவருக்கு புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது முதன் முதலில் தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட வைரஸாகும்.
ஒமிக்ரான் வைரஸ், தென்னாப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைய நேற்று தடை விதித்தது ஜப்பான்.
இந்த தடை உத்தரவு திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இது செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்திருந்தார்.
வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக இந்த மாதத் தொடக்கத்தில் திறந்துவிடப்பட்ட எல்லைப் போக்குவரத்து மீண்டும் மூடப்படுவதை இந்த அறிவிப்பு வெளிக்காட்டுகிறது.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்: மருத்துவர்
முன்னதாக, தென்னாப்ரிக்கா மற்றும் அதன் 8 அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், 10 நாள்கள் தனிமைப்படுத்துதலையும் ஜப்பான் அறிவித்திருந்தது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், புதிய ஒமைக்ரான் பாதிப்பு ஜப்பானில் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.