வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள துணை அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், நாட்டின் உயர்மிக பதவிக்கு அவரின் மகள் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரோட்ரிகோ கூறுகையில், "துணை அதிபர் தேர்தலில் போட்டியிட நான் தகுதியற்றவன் என்றே பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்கள் கருதுகின்றனர். அதை மீறி போட்டியிட்டால், அது அரசியலமைப்பை மீறி சட்டத்தை தவிர்க்கும் செயலாகும். எனவே, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதை இன்று அறிவிக்கிறேன்" என்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், போதை மருந்துகள் இல்லா நாட்டை படைப்பேன் என உறுதி மொழி அளித்தார். இதையடுத்து, மிகப் பெரிய வெற்றியை தன்வசப்படுத்தினார். அன்றைய சூழலை போலவே, ரோட்ரிகோவுக்கு இன்றும் மக்களிடம் மிகப் பெரிய ஆதரவு இருப்பது கருத்துகணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், அங்கு இரண்டாவது முறையாக போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அடுத்த துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என ரோட்ரிகோ ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். பதவியிலிருந்து விலகினால், அவருக்கு எதிரான குற்றச் செயல்கள் விசாரிக்கப்படும் என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் போட்டியிடுவதை அவர் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும், அரசியிலிலிருந்து எப்போது விலகுவார் என்பது அறிவிக்கப்படவில்லை. தனது அரசியல் வாரிசு யார் என்பதை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே இன்னும் அறிவிக்காதநிலையில், அந்த இடத்தை அவரின் மகள் சாரா பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.