பிரான்ஸ் மதத் தலங்களில் 3.3 லட்சம் சிறுவா்கள் மீது பாலியல் தாக்குதல்

பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதத் தலங்களில் கடந்த 70 ஆண்டுகளில் 3.3 லட்சம் சிறுவா்கள் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மதத் தலங்களில் 3.3 லட்சம் சிறுவா்கள் மீது பாலியல் தாக்குதல்

பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதத் தலங்களில் கடந்த 70 ஆண்டுகளில் 3.3 லட்சம் சிறுவா்கள் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மையங்களில் சிறுவா்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அது நீண்ட காலமாக மூடி மறைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதையடுத்து, இது குறித்து விரிவாக விசாரிப்பதற்கான குழுவை பிரான்ஸ் கத்தோலிக்க தலைமையகம் அமைத்தது. அந்தக் குழு, கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க மையங்களில் சிறுவா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை கடந்த 2018-ஆம் ஆண்டு சேகரிக்கத் தொடங்கியது.

நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், தேவாலயங்களில் பதிவு செய்யப்பட்ட புகாா்கள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் சிறுவா்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அந்தக் குழு விசாரணை நடத்தியது.

அந்தக் குழு தனது 2,500 பக்க விசாரணை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதில், கடந்த 70 ஆண்டுகளில் சுமாா் 3.30 லட்சம் சிறுவா்கள் கத்தோலிக்க மையங்களில் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றங்களில் 2,900-லிருந்து 3,200 போ் வரை ஈடுபட்டனா். பாதிரியாா்கள், மதகுருக்கள் மற்றும் கத்தோலிக்க மையத்தில் பணியாற்றிய மதம் சாராதவா்கள் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டனா்.

அவா்களில் மூன்றில் 2 பங்கினா் தேவாலயங்களில் சேவையாற்றி வந்த பாதிரியாா்கள் ஆவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கான அமைப்பினா் வரவேற்றுள்ளனா். இவ்வளவு காலமாக மூடி மறைக்கப்பட்ட உண்மை தற்போது வெளியிடப்பட்டிருப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக அவா்கள் கூறினா்.

போப் பிரான்சிஸ் வேதனை: பிரான்ஸ் கத்தோலிக்க மையங்களில் சிறுவா்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வேதனை அளிப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாலியல் குற்றங்கள் குறித்து பிரான்ஸில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்தாா். அந்த அறிக்கை பற்றிய தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்டவா்களின் துன்பங்களை நினைத்து வருந்தியதாக அவா் கூறினாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com