பொது இடங்களில் வைத்து தண்டனைகளை நிறைவேற்ற வேண்டாம் என தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவை ஆப்கன் அமைச்சரவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவருக்குத் தண்டனையை பொது இடத்தில் வைத்துத் தான் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தாத வரை அப்படிச் செய்யத் தேவையில்லை என தலிபான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முஜாஹித் விரிவாக கூறுகையில், "குற்றம் செய்தவர் தண்டிக்கப்படும் போது, அவர் என்ன குற்றம் செய்தார். அவர் எதற்காகத் தண்டிக்கப்படுகிறார் என்பது போன்ற தகவல்களை நாம் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் அந்த தவறை செய்ய மாட்டார்கள்" என்றார்.
பொது இடங்களில் வைத்து தண்டனையை நிறைவேற்றம் வழக்கம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தொடங்கியுள்ளதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, இது மனித உரிமை மீறல் என்றும் தாலிபான்கள் இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இல்லையென்றால், தேவையில்லாத பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறியிருந்தது.
இதையும் படிக்க | காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது
கடந்த 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்தான் ஆட்சி புரிந்துவந்தனர். அப்போது, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண் கல்வி, பெண்கள் வேலைக்குச் செல்வது ஆகியவை தடை செய்யப்பட்டது. மேலும், சிறு தவறு செய்பவர்களுக்கு கூட பொது இடத்தில் குழந்தைகள் உள்பட அனைவரது முன்னிலையிலும் மரண தண்டனை வழங்கப்பட்டன.