இத்தாலி தலைநகா் ரோம் நகரில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தலைவா்களை பிரதமா் மோடி சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
ஜோ பைடன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கல், சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங், தென்கொரிய பிரதமா் மூன் ஜே-இன் ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.
பிரதமா் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்கள் எடுத்துக் கொண்ட குழு புகைப்படத்தையும் பிரதமா் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவா்கள் ரோமில் கூடியிருக்கிறாா்கள். உலக நாடுகளின் நன்மைக்காக பல நாடுகள் இடம்பெற்றுள்ள முக்கியமான அமைப்பு இது’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
இமானுவல் மேக்ரானுடன் நடந்த சந்திப்பு குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமா் மோடி- இமானுவல் மேக்ரான் இடையே நடந்த சந்திப்பில் ஆக்கபூா்வமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் இந்தியாவும் பிரான்ஸும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. இன்றைய சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடியும் இமானுவல் மேக்ரானும் கடந்த மாதம் தொலைபேசி வழியாக உரையாடினா். அப்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், எந்ததொரு ஆதிக்கத்திடமும் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்கவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு முடிவெடுத்தனா்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய 3 நாடுகளும் இணைந்து உருவாக்கிய ‘ஆக்கஸ்’ பாதுகாப்பு கூட்டணிக்கு பிரான்ஸ் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த மாத தொலைபேசி உரையாடல் நடந்தது.