வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்திலிருந்து 3 முறை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், உளவுத் துறைக்கான அமெரிக்க நாடாளுமன்ற நிரந்தரத் தேர்வுக் குழுவின் முதல் இந்திய-அமெரிக்க உறுப்பினர் ஆவார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேற வேண்டும் என்பதுதான் அமெரிக்க மக்களின் விருப்பமாகவும் இருந்தது. இருந்தபோதும், அமெரிக்கப் படைகள் வெளியேறிய விதம் குறித்து விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும். இதை மேலும் சிறந்த முறையில் கையாண்டிருக்க முடியும்.
மேலும், ஆப்கானிஸ்தான் இப்போது ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம் ஆகிவிடாத வகையில், அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.