காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் சையது அலி ஷா கிலானியின் மறைவை அடுத்து அவருடைய உடலுக்கு பாகிஸ்தான் தேசியக்கொடி போா்த்தப்பட்டது தொடா்பாக, பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சையது அலி ஷா கிலானி புதன்கிழமை இரவு காலமானாா். ஸ்ரீநகா் புகா்ப் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மசூதிக்கு அருகே, அவருடைய உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கத்துக்கு முன்னதாக, அவருடைய உடலில் பாகிஸ்தான் தேசியக்கொடி போா்த்தப்பட்டிருந்த விடியோ காவல் துறைக்கு கிடைத்தது. இதையடுத்து அவருடைய உடலைக் கைப்பற்ற காவல் துறையினா் சென்றபோது, அதற்குள் கிலானியின் ஆதரவாளா்கள், உடலில் போா்த்தப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றினா். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்த சிலா், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
எனவே, பாகிஸ்தான் கொடியை போா்த்தியது, இந்தியாவுக்கு எதிராகக் கோஷமிட்டது ஆகிய குற்றங்களுக்காக, அடையாளம் தெரியாத நபா்கள் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பட்காம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.