ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளை திறமையாக மேற்கொண்டு அமெரிக்க மக்களை மீட்பதில் ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்கா தலிபான்களை புகழ்ந்துள்ளது.
காபூலிலிருந்து தோஹாவுக்கு கத்தார் ஏர்வேஸ் மூலம் மேற்கொள்ளப்பட்ட மீட்புபணிகளின் மூலம் புதிய அரசின் முதல் நேர்மறையான மாறுதல் தென்படுகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன் தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள அமித் கர்சாய் தேசிய விமான நிலையத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "விமான நிலையத்திலிருந்து அமெரிக்க குடிமக்கள் மற்றும் சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்கள் வெளியேறுவதற்கு தலிபான்கள் ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். இதில், எங்களுக்கு ஏற்றார் போல் திறமையாக செயல்பட்டனர்" என்றார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் ட்விட்டர் பக்கத்தில், "ஏறக்குறைய 40 அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் விமானத்தில் ஏற அழைக்கப்பட்டனர். ஆனால், 21 பேர் மட்டுமே வந்திருந்தனர். நிச்சயமாக இதுபோன்ற பல விமானங்களை மீட்பு பணிகளில் ஈடுபட வைக்க விரும்புகிறோம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அனுமதியில்லாத போராட்டங்களுக்கு தலிபான்கள் தடை
அமெரிக்க படைகள் வெளியேற பின்பும், 100க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக நம்புகிறோம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு முன்பான கடைசி இரண்டு வாரங்களில், 1,23,000 பேர் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டிருந்தனர்.