தெற்கு இங்கிலாந்து கடற்பகுதிக்கு அருகே ஆடம்பர கப்பலிலிருந்து 2 டன் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பிரிட்டன் தேசிய குற்ற முகமை இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை மாலை கரீபியன் தீவுகளிலிருந்து வந்த ஜமைக்கா நாட்டின் கொடி வைக்கப்பட்டிருந்த கப்பலிலிருந்து 221 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான போதைப் பொருள் கண்டிபிடிக்கப்பட்டதையடுத்து, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர், நிகரகுவான்
நாட்டை சேர்ந்த ஐவர் ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கப்பலின் ஓய்வறையில் கருப்பு நிற பைகளில் வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளின் புகைப்படத்தை தேசிய குற்ற முகமை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய குற்ற முகமையின் துணை இயக்குநர் மாட் ஹார்ன் கூறுகையில், "பிரிட்டன் முழுவதும் இந்த போதை பொருள்கள் விற்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அமைப்பாக செயல்பட்டுவரும் குற்ற கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆஸ்திரேலிய காவல்துறை மேற்கொண்ட ரகசிய சோதனையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவல் பிரிட்டனுக்கு கிடைத்ததை தொடர்ந்து, பிளைமவுத் துறைமகத்திலிருந்து 130 கிமீ தூரத்திலிருந்த கப்பல் இடைமறிக்கபட்டு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.