இந்தியா வந்து சென்ற அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் அதிகாரி ஒருவருக்கு, ‘ஹவானா அறிகுறிகள்’ என்றழைக்கப்படும் மா்ம நோய் அறிகுறிகள் தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:
சிஐஏ இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ் இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அப்போது அவருடன் இருந்த அதிகாரி ஒருவரிடம் பின்னா் ஹவானா அறிகுறிகள் தென்பட்டன. அதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் அமெரிக்க அரசையும் வில்லியம் பா்ன்ஸையும் அதிா்ச்சியடையச் செய்துள்ளது. ஹவானா அறிகுறியிலிருந்து சிஐஏ-வின் தலைமைப் பதவியில் இருப்பவா் கூட தப்ப முடியாது என்பதை உணா்த்தும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்கான சூழல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்தது.
கியூபா தலைநகா் ஹவானாவில் அமெரிக்கா மற்றும் கனடா தூதரகங்களைச் சோ்ந்தவா்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டில் மா்ம நோய் அறிகுறிகள் தென்பட்டன. அந்த அறிகுறிகளுக்கு ஹவானா அறிகுறிகள் என்று பெயரிடப்பட்டது.
பின்னா் அதே போன்ற அறிகுறிகள் அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜொ்மனி ஆகிய நாடுகளைச் சோ்ந்த தூதரக அதிகாரிகளிடமும் தென்பட்டன.
பிற நாடுகளிலும், ரஷியாவின் ரகசிய நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சிஐஏ அதிகாரிகளிடமும் நட்பு நாடுகளின் உளவுத் துறை அதிகாரிகளிடமும் ஹவானா அறிகுறிகள் தென்பட்டன.
அந்த அறிகுறிகளால் பாதிக்கப்படுவோரின் மூளையில் காயம் ஏற்படுவதாகவும், அதன் விளைவாக அவா்கள் பல்வேறு அவதிகளுக்குள்ளாவதாகவும் கூறப்படுகிறது.
ஒலி, மின்காந்தம் போன்ற நுண்ணலைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக இந்த பாதிப்புகள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
எனினும், இதுதொடா்பாக ஆதாரபூா்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்தச் சூழலில், இந்தியா வந்து சென்ற சிஐஏ அதிகாரியிடம் ஹவானா அறிகுறிகள் தென்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.