இங்கிலாந்தில் வீட்டிலிருந்து அருகில் உள்ள கேளிக்கை விடுதிக்கு நண்பரை சந்திக்க சென்ற ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பூங்காவில் ஆசிரியரை கொலை செய்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து சந்தேகத்திற்குள்ளான நபர் ஒருவரை கைது செய்திருப்பதாக பிரிட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, தெற்கு லண்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து ஆசிரியர் சபீனா நேசா இரவு 8:30 மணிக்கு கிளம்பியுள்ளார். கிட்ப்ரூக் கிராமத்தில் கேட்டர் பூங்கா வழியே கேளிக்கை விடுதிக்கு சென்றிருக்கிறார். ஆனால், அங்கு அவர் செல்லவே இல்லை. அடுத்த நாள் மதியம், அவரின் உடல் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து துப்பறியும் பிரிவு ஆய்வாளர் ஜோ கேரிட்டி கூறுகையில், "ஐந்தே நிமிடத்தில் சபீனா அந்த இடத்தை அடைந்திருக்கலாம். ஆனால், அங்கு அவர் செல்லவே இல்லை" என்றார்.
சந்தேகத்தின் பேரில் 38 வயதான ஒருவரை தெற்கு லண்டன் லூவிஷாமில் கைது செய்ததாக காவல்துறையினர் பின்னர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதில் இருக்கும் நபரையும் வாகனத்தையும் எங்கேனும் பார்த்திருந்தால் தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | இன்னும் எத்தனை காலம்தான் முகக்கவசம் அணிவது?
இதுகுறித்து துப்பறியும் தலைமை ஆய்வாளர் நீல் ஜான் கூறுகையில், "சிசிடிவியில் உள்ள அந்த நபரின் அடையாளம் அல்லது அவர் எங்கிருக்கிறார் பற்றிய தகவல்கள் கிடைத்தால், எங்கள் விசாரணைக்கு அது உதவியாக இருக்கும்" என்றார். திங்கள்கிழமை நடத்தப்பட்ட உடற்கூறாய்வின் முடிவுகள் வழக்கு குறித்து எந்த ஒரு தெளிவையும் ஏற்படத்தவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.