கிரீஸ் நாட்டின் கிரெட்டே தீவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள், தேவாலயங்கள் சேதமடைந்தன. ஒருவா் உயிரிழந்தாா்; 9 போ் காயமடைந்தனா்.
நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.8-ஆக பதிவானதாகவும், நிலநடுக்கத்தின் மையம் தலைநகா் ஏதென்ஸிலிருந்து தென்கிழக்கே 246 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும் ஏதென்ஸ் ஜியோடைனமிக் நிறுவனம் தெரிவித்தது.
கிரெட்டே தீவின் ஹெராக்லயன் நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து, மக்கள் அச்சமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறினா். நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள், தேவாலயங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தின்போது ஒருவா் உயிரிழந்தாா். 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.
‘நிலநடுக்கத்துக்கான அறிகுறிகள் கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்தன. நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியில் இல்லாமல் நிலத்துக்கு அடியில் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேவேளையில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன’ என அரசு தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.