கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி அளிக்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் ஏப்ரல் 19ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது. இதுகுறித்த முடிவு அக்டோபர் மாதம் எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்ள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆவணம் உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பம் தொடர்பான முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி குறித்து சமர்பிக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகள் ஜூலை 6ஆம் தேதி முதல் ஆராயப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட ஆய்வுகளின் சராசரி முடிவுகள் வழங்கப்பட்டுள்ளதால், கோவாக்சின் தடுப்பூசியின் மதிப்பாய்வு இப்போதே தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து செயல்முறை ரகசியமாக மேற்கொள்ளப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தடுப்பூசி அதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்தால், ஆராய்ச்சி முடிவுகள் விரிவாக வெளியிடப்படும்.
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் ஆகியவை இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளாகும்.