கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு முதல் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதை அடுத்து இலங்கையில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டீசல் இல்லாததால் அங்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவிளக்குகளையும் அரசு அணைத்துள்ளதால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது.
உயிரைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதைக் கண்டித்தும், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரியும் ஏராளமான பொதுமக்கள் பங்கிரிவட்ட லேன் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த தடையை மீறி சாலை விளக்குகள் இல்லாததால் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போராட்டக்காரர்கள் அதிபா் கோத்தபய ராஜபட்சயின் மோசமான நிர்வாகக் குறைபாடு காரணம் எனவும், "பெட்ரோல் வேண்டாம், எரிவாயு வேண்டாம், பால் பவுடர் வேண்டாம், மின்சாரம் வேண்டாம்", "கோத்தபய பதவி விலகி வீட்டுக்கு போ" என்ற பதாகை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியவாறு தடுப்புகளைத் தாண்டி அதிபா் இல்லத்தை நோக்கி சென்றதால் கோபமடைந்த போலீஸாா் கண்ணீா்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறிய இலங்கையில் அதிபருக்கு எதிராக மக்களின் போராட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து கொழும்புவில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழுப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பணவீக்கம் 17 ஆக உயர்ந்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தனது அரசுஉருவாக்கியது அல்ல என்றும் பெரும்பாலும் தொற்றுநோய் பாதிப்பலேயே இந்த கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி கோத்தபய ராஜபட்ச தனது அரசாங்கத்தை பாதுகாத்துள்ளார்.