ரஷியப் படைகளின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கீவில் 987 குழந்தைகள் பிறப்பு

ரஷியப் படைகள் தாக்குதலை தொடங்கியதில் இருந்து நேற்று வியாழக்கிழமை வரை தலைநகர் கீவில் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
ரஷியப் படைகளின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கீவில் 987 குழந்தைகள் பிறப்பு

தனது மிக நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் ரஷியப் படைகள் தாக்குதலை தொடங்கியதில் இருந்து நேற்று வியாழக்கிழமை வரை தலைநகர் கீவில் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

உக்ரைன், அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் இணைந்தால், அது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய மேற்கத்திய ஆதரவு அரசு, நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வந்தது.

அதையடுத்து, ரஷியா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்த ரஷியா, அந்தப் பகுதி மக்களை உக்ரைன் படையினரிடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி அந்தப் பகுதிகளுக்கு தனது ராணுவத்தை அனுப்பியது.

மேலும், உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்திலிருந்து ‘நாஜி’ சக்திகளை அகற்றவும் உக்ரைனின் தாக்குதல் திறனை அழிக்கவும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக ரஷிய அதிபா் விளாதமீா் புதின் அறிவித்தாா்.

போா் தொடங்கி  ஐந்து வாரங்கள் கடந்த நிலையில், உக்ரைனில் எதிா்பாா்த்த அளவுக்கு ரஷியப் படையினரால் முன்னேற முடியவில்லை என்று கூறப்படுகிறது. தெற்குப் பகுதி நகரான கொ்சானைத் தவிர வேறு எந்த முக்கிய நகரையும் ரஷியப் படையினரால் கைப்பற்ற முடியவில்லை.

எனினும், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் அந்த நகரை சுற்றிவளைத்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள உக்ரைன் துறைமுக நகரான மரியுபோலில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக ரஷியா ஒரு நாள் போா் நிறுத்தம் அறிவித்துள்ளது. அந்த போா் நிறுத்தத்தைத் தொடா்ந்து, பொதுமக்களை அழைத்து வருவதற்காக ஏராளமான பேருந்துகளை அந்த நகருக்கு உக்ரைன் அரசு அனுப்பிய நிலையில், நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் புதைந்து கிடப்பதாகவும், நகரின் 90 சதவிகித கட்டடங்கள் அழிந்துவிட்டதாகவும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போரில் 987 குழந்தைகள் பிறப்பு: இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியப் படைகளின் பேரழிவுகளுக்கு மத்தியில் தலைநகர் கீவில் நேற்று வியாழக்கிழமை வரை  35 நாள்களில் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்நாட்டு அரசுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதில், 534 ஆண் குழந்தைகள், 453 பெண் குழந்தைகள், 25 இரட்டைக் குழந்தைகள் என மொத்தம் 987 குழந்தைகள் பிறந்துள்ளது. 

உக்ரைனின் கீவில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையின் தரைத்தளம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ வார்டாக மாற்றப்பட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களாக நடந்து வரும் பேரழிவுகளுக்கு மத்தியில் கீவ் நகரம் குழந்தைகள் பிறந்த கொண்டாட்டச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டு வருவதால், கீவில் நம்பிக்கை ஒளிர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.


கீவில் தற்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ராணுவச் சட்டத்தின் கீழ் உள்ள கீவில்,  மக்கள் "தலைநகருக்குத் திரும்பத் தொடங்கி உள்ளதாகவும், வார தொடக்கத்தில்  ஊரடங்கு இரண்டு மணிநேரம் குறைக்கப்பட்ட உத்தரவை அடுத்து, தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மது மீதான தடையை வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரங்களுக்குள் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கீவ் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. 

உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுபவர்களுக்கு கீவில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கீவ் நகர புற்றுநோயியல் மையத்தில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், "மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்." 

நகரம் முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உளவியல் நிபுணர்கள் குழுவாகவும், தனிப்பட்ட முறையிலும் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

" ரஷியப் படைகள் தலைநகர் கீவில் இருந்து விலகி பெலாரஸ் நோக்கி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கீவிற்கு எதிரான தாக்குதலில் குறைந்த எண்ணிக்கையிலான ரஷியப் படைகளே ஈடுபட்டு வருகின்றன என்று கீவ் நகர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com