கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினா்.
அப்போது, அதிபரின் இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த தடையை மீறி சென்ற போராட்டக்காரா்களை போலீஸாா் கண்ணீா்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டீசல் இல்லாததால் அங்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவிளக்குகளையும் அரசு அணைத்துள்ளதால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது.
உயிரைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதைக் கண்டித்தும், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரியும் ஏராளமான பொதுமக்கள் பங்கிரிவட்ட லேன் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலை விளக்குகள் இல்லாததால் இருளில் தீப்பந்தங்களை ஏந்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடுப்புகளைத் தாண்டி அதிபா் இல்லத்தை நோக்கி சென்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கலைத்தனா்.