உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 300 மில்லியன் டாலர்(ரூ. 2,278.60 கோடி) நிதியுதவி அளித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி அழித்து வருகிறது. உக்ரைனும் பல்வேறு நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
நேற்று உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கராட்டில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கினை உக்ரைன் படை தாக்கியுள்ளது. ஆனால், உக்ரைன் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவிக்கவோ ஒப்புக்கொள்ளவோ இல்லை.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆரம்பம் முதலே ராணுவ உதவிகள், நிதி என உதவி செய்து வரும் அமெரிக்கா இன்று மேலும் 300 மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் ரூ. 2,278.60 கோடி) வழங்கியுள்ளது. தற்காப்பு நடவடிக்கைகளுக்காக ராணுவ உதவியாக இந்த தொகை வழங்கப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது,
கடந்த புதன்கிழமை உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசியபோது உக்ரைனுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு