பிரிட்டனில் புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எக்ஸ்இ வகை கரோனா ஒமைக்ரானை விட வேகமாக பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் திரிபுகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் பிறழ்வுதான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எக்ஸ்இ வகை கரோனாவாகும். ஒரே நேரத்தில் குறிப்பிட்ட நபர் பல்வேறு கரோனா திரிபுகளால் பாதிக்கப்படும்போது புதிய வகை உருவாகிறது. திரிபுகள் சேர்க்கையின்போது மரபியல் சார்ந்த கூறுகள் கலந்து புதிய வகை கரோனா உருவாவதாக பிரிட்டன் நிபுணர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து விரிவாக தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, "ஒமைக்ரான் வகையின் துணை திரிபான பிஏ.2வை விட புதிதாக உருவாகியுள்ள எக்ஸ்இ கரோனா 10 சதவிகிதம் அதி வேகமாக பரவலாம்.
இதையும் படிக்க | ரமலான் நோன்பு தொடங்கியது
பிஏ.2வை விட புதிதாக உருவாகியுள்ள எக்ஸ்இ கரோனாவின் வளர்ச்சி விகிதம் 10 சதவிகிதம் அதிகம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி, எக்ஸ்இ வகை கரோனா முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, 637 பேர் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு மத்தியில், ஒமைக்ரானின் பிஏ.2 துணை திரிபு உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. மார்ச் 26ஆம் தேதி வரை, பிரிட்டனில் 49 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.