இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சமூக வலைதளங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கின.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்ததால், அதனைக் கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தாா்.
இதனை எதிர்த்து பொதுமக்கள், மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் கொழும்புவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் வீட்டில் கூடிய எதிர்க்கட்சி எம்பிக்கள், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
தற்போது இலங்கை முழுவதும் சமூகவலைதளங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனை இலஞ்கை தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் உறுதி செய்துள்ளன.