இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் கூறியதாவது:
“அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ள சூழலில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, பிரதமரை தவிர்ந்து பிற அமைச்சர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தனர். அவர்களின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட அதிபர், அனைத்து கட்சிகள் உள்ளடங்கிய அமைச்சரவையை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.