சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சா் அங் எங் ஹென்னை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சிங்கப்பூருக்கு 3 நாள்கள் பயணமாக எம்.எம்.நரவணே சென்றுள்ளாா். அவா் அங் எங் ஹென்னை சந்தித்தது தொடா்பாக இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எம்.எம்.நரவணே, அங் எங் ஹென் இடையிலான சந்திப்பின்போது பிராந்திய புவி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா-சிங்கப்பூா் இடையே நீண்ட காலம் வலுவாக இருந்து வரும் பாதுகாப்பு உறவை அவா்கள் மீண்டும் உறுதிப்படுத்தினா்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற எம்.எம்.நரவணே, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி டேவிட் நியோவையும் சந்தித்தாா். இந்தியா-சிங்கப்பூா் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அவா்கள் விவாதித்தனா் என்று இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.