வாஷிங்டன்: இலங்கையில் தற்போது கடுமையான எரிபொருள் பற்றாக்குறையும், மருத்துவப் பொருள்களின் பற்றாக்குறையும் நிலவுவதால், நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தீவு நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் அபாயமும் இருப்பதாக அமெரிக்கா தன் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டன் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி இதுவாகும்.
பல மணி நேர மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் போன்றவற்றை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்து, புதிதாக 4 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ஆனால், நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து வந்த கட்சிகள் சில தங்களது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்ததும், காபந்து அரசில் பொறுப்பேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தும், அதனை ஏற்க முக்கிய எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்ட நிலையில், அங்கு பொருளாதார நிலைமையுடன், அரசியல் சூழ்நிலையும் படுமோசமாக மாறிவருகிறது.