கொழும்பு: இலங்கையின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட 24 மணி நேரத்தில், தனது பதவியை ராஜிநாமா செய்த அலி சப்ரிதான் இன்னமும் இலங்கையின் நிதியமைச்சராக நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அலி சப்ரியின் ராஜிநாமாவை, அதிபர் கோத்தபய ராஜபட்ச ஏற்றுக் கொள்ளாததால், இதுநாள்வரை இலங்கையின் நிதியமைச்சராக அலி சப்ரிதான் நீடிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் இலங்கை அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். இதையடுத்து கடந்த வாரம் அலி சப்ரி உள்பட நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், நிதியமைச்சராக பொறுப்பேற்று 24 மணி நேரத்துக்குள் தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அளித்திருந்தார். அதில், தற்காலிகமாக மட்டுமே தான் பொறுப்பேற்றதாகவும், நிலைமை சீராக்க நாடாளுமன்றத்துக்கு வெளியே இருக்கும் வேறு யாரையேனும் அப்பதவிக்கு நியமிக்க அதிபர் விரும்பினால் அவர்களை தேர்வு செய்து கொள்ளலாம், பதவியை துறக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த ராஜிநாமா கடிதத்தை அதிபர் ஏற்றுக் கொள்ளாததால், இதுநாள்வரை அவர் இலங்கையின் நிதியமைச்சராக அலி சப்ரிதான் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.