கனடாவில், கருப்பு நிற பை, வெள்ளை நிற காலணி அணிந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களில் வெளியானது. ஆனால் இந்த செய்தி, உத்தரப்பிரதே மாநிலம் காஸியாபாத்தில் இருக்கும் ஒரு தம்பதிருக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை, அவர்களது 21 வயது மகன் கார்த்திக் வாசுதேவ், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கி பேருந்தைப் பிடித்து பகுதிநேர பணிக்காக டோரண்டோ சென்று கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியான போது அவர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக்தான் என்பதை உறுதி செய்து கொண்ட உறவினர், அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கிறார்கள்.
முதற்கட்ட தகவலின்படி, கார்த்திக், ஷேர்போர்னே மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் துப்பாக்கிக் குண்டு காயங்களால் கொல்லப்பட்டார். அவரது மரணம் குறித்து வெள்ளிக்கிழமை கனடாவிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த கொலைக்கான காரணம்பற்றி தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து கனடாவின் டோரன்டோ நகருக்கான இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், அவரது உடலை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுட்டுரைப் பதிவை இணைத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது சுட்டுரையில், இந்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. கார்த்திக்கின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.