ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. உக்ரைன் போருக்கு முன்னர் 30 சதவிகிதம் பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்திருந்தனர்.
போருக்குப் பின்னர் 60 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சர்வதேச அரசியலில் நிலைமை வேகமாக மாறி வரும் சூழலில், தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று பின்லாந்து முன்னாள் பிரதமரும் நேட்டோ ஆதரவாளருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தேசியப் பாதுகாப்பு மறு ஆய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டு நேட்டோ அமைப்பில் இணையலாமா வேண்டாமா என்பதைப் பின்லாந்து எம்பிக்கள் முடிவு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் சன்னா மரின் மேலும் கூறுகையில், "இது குறித்து ஆழமான விவாதம் நடத்தப்படும். அதேநேரம் சீக்கிரம் இதில் முடிவு எடுத்துவிடுவோம். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிக்க | மோடி- பைடன் இன்று பேச்சு...
150 ஆண்டுக்கால ரஷ்ய ஆட்சிக்குப் பிறகு 1917ஆம் ஆண்டு பின்லாந்து சுதந்திரம் அடைந்தது. அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நடைபெற்ற பனிப்போர் சமயத்திலும் பின்லாந்து நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்தது. அதற்குப் பதிலாகப் பின்லாந்து மீது படையெடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தைச் சோவியத் ஒன்றியம் வழங்கி இருந்தது.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. பின்லாந்து நாட்டில் உள்ள 200 எம்பிகளில் வெறும் 6 பேர் மட்டுமே நேட்டோவில் இணையும் முடிவை வெளிப்படையாக எதிர்கின்றனர். பெரும்பாலான எம்பிகள் பின்லாந்து நாட்டில் இணைய வேண்டும் என்றே தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.