கீவ் பகுதியில் இருந்து 1,200 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் உக்ரைனின் பெரும்பாலான நகர்ப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. ரஷியா தரப்பிலும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம் உக்ரைனின் கீவ் அருகே புச்சா பகுதியில் இருந்து 400 உடல்கள் கைப்பற்றப்பட்டது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மக்கள் ரஷிய வீரர்களால் துன்புறுத்திக் கொல்லப்பட்டது அதில் தெரியவந்தது.
இந்நிலையில் உக்ரைனின் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 1,222 உடல்கள் கைப்பற்றுள்ளதாக அந்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா தெரிவித்துள்ளார். மேலும் புதைசாக்கடையில் இருந்து இரண்டு சடலங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் உக்ரைனில் இதுவரை 1,793 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,439 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.